Monday, February 18, 2008

பேசும் யானை


பெரிசா எங்களைப் படைச்சதால
பெரிய கோயிலில் நிறுத்திப்புட்டான்
பேச முடியா ஊன ஜாதியை
பிச்சை எடுக்கவும் பழக்கிப்புட்டான்

முழங் கையளவு குச்சியை வைச்சு
முட்டிக்கு முட்டி தட்டுறிய
மூனு மாசத்துக் கொருமுறை தான்
முதுகில தண்ணீ ஊத்துறிய

கட்டுக்கட்டா கரும்பு திங்கும்
கம்பீரக் கூட்டம் நாங்க
காய்ஞ்சு போன
தட்டையை
கால் வயிற்றுக்குப் போடுறிய
கால் நகர முடியாம
கட்டிப் போட்டு வாட்டுறிய

என்னைப் பெத்த மவராசி
எந்தக் கோயில் வாசலிலோ
என் வயித்துல புள்ள பூச்சி
எந்தக் காலமோ தெரியலியே

சாமி பேரைச் சொல்லிச் செஞ்சா
சாகடிக்கிறதும் உங்களுக்குக் குத்தமில்லை
சதா காலம் சாவுறதை விட
சட்டுனு சுட்டுப்போடும் வீரப்பன் தேவலைங்க

வருஷத்துல ஒருமாசம் முதுமலை கேம்ப்
வாஸ்து பொலிட்டிசியன் போட்ட பிச்சை
வருஷம் முழுக்க காட்டுக்குள்ளே கூட்டமா
வாழ்வது தானே எங்க ஜனத்தின் இச்சை

வாய் பேச முடிஞ்சதால
வந்தேன் ஜார்ஜ் கோட்டைக்கு
வனத்துறை மந்திரியைப் பாத்து
வயிற்றெரிச்சலைக் கொட்டிப் போட

13 comments:

அன்புடன் புகாரி said...

வட்டார வழக்கில் யானையின் பேச்சு அருமை

பிச்சை எடுக்கவும் பழக்கிப்புட்டான்

என்னைப் பெத்த மவராசி
எந்தக் கோயில் வாசலிலோ
என் வயித்துல புள்ள பூச்சி
எந்தக் காலமோ தெரியலியே

சாமி பேரைச் சொல்லிச் செஞ்சா
சாகடிக்கிறதும் உங்களுக்குக் குத்தமில்லை

சதா காலம் சாவுறதை விட
சட்டுனு சுட்டுப்போடும் வீரப்பன் தேவலைங்க

இந்த வரிகளெல்லாம் அமர்க்களம் ஜான்!

அன்புடன் புகாரி said...

உங்களின் இந்த கவிதையை நான் அன்புடன் குழுமத்தில் இடுகிறேன் இப்போதே, நன்றி

seethaalakshmi subramanian said...

பேசவே முடியாமல் மனிதனே உள்ளான்
பேசுதற்கு யானையால் முடியுமோ
கவிதை என்றால் காதல் என்ற நிலை
கவிதையில் பிற காட்சி தரும் ஜான்
கனிவுடனே பாரட்டுகின்றேன் உம்மை
கருத்துள்ள கவிதை தரும் ஜான் வாழ்க

சீதாலட்சுமி

வேந்தன் அரசு said...

ஜான்

உங்கள் ஈர நெஞ்சம் கவிதையில் புலப்படுகிறது.

பிச்சை எடுப்பதாக கருதுதல் சரியில்லை. அய்யர் தட்டில் காசு போடும் மக்களுக்கு ஏதேனும் கொடுத்தல் ஆசிர்வதித்த யானைக்கு
ஒரு நன்றிக்கடன்

வேந்தன் அரசு

உமையாளீசன் said...

உணர்வு பூர்வமான கவிதை. யானைகள் உள்ள கோவில்களிலெல்லாம் கட்டப்படும் தூண் அருகே சுவரில் இதை பெரிதாகப் எழுதி வைக்க வேண்டும். :))

GEETHA SAMBASIVAM said...

//கட்டுக்கட்டா கரும்பு திங்கும்
கம்பீரக் கூட்டம் நாங்க
காய்ஞ்சு போன தட்டையை
கால் வயிற்றுக்குப் போடுறிய//

உண்மை, மனதை அறுக்கும் உணமையும் கூட! :(

Chidambaram Kasiviswanathan said...

அன்பு நண்ப,

தமிழோவியத்தில் வந்த ஜான் பீ பெனெடிக்டின் கவிதை அருமை. எளிய நடையில் அருமைக்
கவிதை. காட்டில் சுதந்திரமாகத் யானைகள் திரிவதை விட்டு விட்டு கோவிலில் பிச்சை எடுக்க வேண்டிய நிலை. இருப்பினும் அதிலும் ஒரு மகிழ்ச்சி - இருப்பது தேவன்
சன்னிதி. இறைவனின் பூசையிலே தினம் பங்கு பெறும் பாக்கியம். இறைவனைச் சுமக்கும்
மகிழ்வு - இத்தனையும் உண்டு இங்கே

சட்டெனப் பிடிக்கிறது மனதிற்கு.

வாழ்த்துகள் பெனெடிக்ட்
அன்புடன் ..... சீனா

Chidambaram Kasiviswanathan said...

அருமை நண்ப, பெனடிக்ட்,

எளிய சொற்களைக் கொண்டு அருமையான கவிதை படைத்திருக்கிறீர்கள்.
சிந்தனை அருமை. வழக்கமாக கோவில்களில் யானையைக் காணும் போது, காசு கொடுத்து ஆசி வாங்குவது தான் பழக்கம். ஆனால், தங்களுக்கு யானை படும் துயரம் மனதில் பட்டு ஒரு கவிதையாக வெளி வருகிறது. நன்று நன்று.

இருக்கும் இடத்தில் இருந்தால் தான் எல்லாவற்றிற்கும் பெருமை.

அன்புடன் சீனா

cheena (சீனா) said...

http://padiththathilpidiththathu.blogspot.com/2008/02/blog-post.html


சென்று பாருங்களேன்

நன்றி

John Peter Benedict said...

எனது இந்தக் கவிதையை ஏகப்பட்டோரிடம் எடுத்துச் சென்று பிரபலப்படுத்திய 'தமிழ்க் காதலர்' கவிஞர் புகாரி, சீனா ஆகியோருக்கும் ஆர்வமாய் படித்துப் பாராட்டிய நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

cheena (சீனா) said...

நன்றி பெனெடிக்ட்

Anonymous said...

Nice one. The similar problem is faced by children, who forced to work in Sivakasi and all over India. As you rightly mentioned in your poem, they too can't express their view and suffer like animals. Hope there will be end to this.

Anonymous said...

உண்மை சொன்னீங்க போங்க. உண்மை க(வி)தை.

அன்புடன் நாசர் (திருச்சி)