Wednesday, August 22, 2007

வேண்டும்...வேண்டும்...வேண்டும்

வருடத்தில் பாதி நாட்களாவது
வற்றாமல் ஓடிச் சென்று
வட்டாரத்தையே வளம் கொழிக்கச் செய்திடும்
வளம் நிறைந்த காவிரி வேண்டும்

வாய்ச்சவடால் வீரராக இருந்தாலும்
வருங்காலத்தை மாற்றிடும் திட்டங்களுடன்
வழக்கு ஏதும் நிலுவையிலில்லா
வயது குறை திறமை நிறை முதல்வர் வேண்டும்

கணவனுக்கும் கள்ளக் காதல்
கட்டிய மனைவிக்கும் கள்ளக் காதல்
கள்ளக் காதல் கருமாந்திரம் இல்லாத
கலகலப்பான மெஹா சீரியல் வேண்டும்

கல்யாண ஆசை இருந்தாலும்
கவர்ச்சியும் காசுமில்லா காரணத்திற்காக
கல்யாணம் ஆகாமல் கலங்கி நிற்கும்
இளம் பெண்கள் இல்லா உலகு வேண்டும்

வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்படாத
வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் விரட்டியடிக்கப்படாத
வரலாறு காணாத வன்முறை நடந்திடாத
உள்ளாட்சித் தேர்தல் ஒன்று உடனடியாய் நடக்க வேண்டும்

அதிகாரிகளைப் பந்தாடா அரசியல்வாதிகள் வேண்டும்
அடித்தட்டு மக்களை அலட்சியப்படுத்தா அதிகாரிகள் வேண்டும்
கணவன் மனைவி சண்டை யில்லா
கருத்தொற்றுமை நிறை குடும்பங்கள் வேண்டும்

விண்ணுலகம் நான் செல்லுங் கால்
விரும்பிய இவற்றை யமர்ந்து நோக்குதற்காய்
வியாழன் கிரகத்தின் வடகிழக்கு மூலையில்
வீட்டுமனைப் பட்டா ஒன்றுமெனக்கு வேண்டும்!

7 comments:

கோவி.கண்ணன் said...

ஐயா,

அனைத்து வரிகளும் சூப்பர் !

பாராட்டுக்கள் !

Anonymous said...

அப்படியே எனக்கும் பக்கத்தில் ஒரு பட்டா வாங்கி போடுங்க.

ஆசைகள் நிறைவேறினால் சந்தோசம் தான்..

ம்ம்ம்... எங்கேயோ போயிட்டீக போங்க.... :)

Anonymous said...

> வருடத்தில் பாதி நாட்களாவது
> வற்றாமல் ஓடிச் சென்று
> வட்டாரத்தையே வளம் கொழிக்கச் செய்திடும்
> வளம் நிறைந்த காவிரி வேண்டும்

அதற்கு கர்நாடாகாவின் மக்கள் போராட்டம் நடத்தாமல் இருக்க வேண்டும்!!
கர்நாடகாவின் அரசியல்வாதிகள் மக்களைத் தூண்டிவிடாமல் இருக்க வேண்டும்!!

>வாய்ச்சவடால் வீரராக இருந்தாலும்
> வருங்காலத்தை மாற்றிடும் திட்டங்களுடன்
> வழக்கு ஏதும் நிலுவையிலில்லா
> வயது குறைந்த திறமை நிறைந்த முதல்வர் வேண்டும்

ம்ம்ம்.. அதற்கு வயது முதிர்ந்த முதல்வருக்கு ராஜினாமா செய்யும் பெருந்தன்மை
வேண்டும்.
திரும்பவும் தயாநிதி மாறன் தி.மு.க வுக்கு வர வேணும்...
அல்லது அடுத்த தேர்தல் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.

>கணவனுக்கும் கள்ளக் காதல்
> கட்டிய மனைவிக்கும் கள்ளக் காதல்
> கள்ளக் காதல் கருமாந்திரம் இல்லாத
> கலகலப்பான மெஹா சீரியல் வேண்டும்

ம்ம்ம்.. அந்த மாதிரி கதை இனி மேல் எழுதினால் கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில்
போடப்படும் என்ற சட்டம் வர வேண்டும்.
இந்த மாதிரி சீரியலுக்கு விளம்ப்ரம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

>கல்யாண ஆசை இருந்தாலும்
> கவர்ச்சியும் காசுமில்லா காரணத்திற்காக
> கல்யாணம் ஆகாமல் கலங்கி நிற்கும்
> இளம் பெண்கள் இல்லா உலகு வேண்டும்

:) :) ம்ம்ம். அதற்கு சிம்ரனையும் , ஸ்ரீதேவியையும் கனவு காணாமல் தங்கள்
முகங்களையும் கண்ணாடிகளில் பார்க்கும் இளைஞர்கள் வேண்டும்.
மகன் பிறந்த உடனேயே வரதட்சணை கணக்குப் பார்க்கும் அம்மாக்கள் இல்லாமல் போக
வேண்டும்.
அல்லது பெண்களே பிறக்காமல் இருக்க வேண்டும். அப்ப தெரியும் சேதி...!!

>வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்படாத
> வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் விரட்டியடிக்கப்படாத
> வரலாறு காணாத வன்முறை நடந்திடாத
> உள்ளாட்சித் தேர்தல் ஒன்று உடனடியாய் நடக்க வேண்டும்

ஓஓஓஓஓஓஓஓ? அதற்கு நாடு முழுவதும் ஒரே நாளில் இன்னொரு பிறப்பெடுக்க வேண்டும்.

>அதிகாரிகளைப் பந்தாடாத அரசியல்வாதிகள் வேண்டும்
> அடித்தட்டு மக்களை அலட்சியப்படுத்தாத அதிகாரிகள் வேண்டும்
> கணவன் மனைவி சண்டைகள் இல்லாத
> கருத்தொற்றுமை நிறைந்த குடும்பங்கள் வேண்டும்

எப்படியாவது கடவுளின் ஏதேனின் தோட்டம் வந்தாக வேண்டும்!!

>விண்ணுலகம் நான் செல்வதற்குள்
> விரும்பிய இவற்றையெல்லாம் பார்ப்பதற்கு
> வியாழன் கிரகத்தின் வடகிழக்கு மூலையில்
> வீட்டு மனைப் பட்டா ஒன்றும் எனக்கு வேண்டும்!

அங்கேயும் வாஸ்து சாஸ்திரம் பார்க்காமல் வாழ் வேண்டும் நீடூழி காலம்..!!

கனவு மெய்த்திட வேண்டும்!!
காரியங்கள் கைகூடிட வேண்டும்.
தினமும் நல்லது நடந்திட -நம்
சிந்தனையில் தூய்மை வேண்டும்!!

அன்புடன்
சுவாதி

Anonymous said...

கனவு மெய்ப்படும்,
உங்களுக்கு முன்னரே வியாழனில் குடியேறியவள். -:)

Anonymous said...

"விண்ணுலகம் நான் செல்வதற்குள்
விரும்பிய இவற்றையெல்லாம் பார்ப்பதற்கு
வியாழன் கிரகத்தின் வடகிழக்கு மூலையில்
வீட்டு மனைப் பட்டா ஒன்றும் எனக்கு வேண்டும்!"

அருமை JOHN. வாழ்த்துக்கள்

Anonymous said...

Asathuringa KavingarE! vazhthukkal

முரளிகண்ணன் said...

\\கணவனுக்கும் கள்ளக் காதல்
கட்டிய மனைவிக்கும் கள்ளக் காதல்
கள்ளக் காதல் கருமாந்திரம் இல்லாத
கலகலப்பான மெஹா சீரியல் வேண்டும்
\\
மற்றதெல்லாம் நிறைவேறும். இது மிக கடினம்